என்னை பத்திரமா பாத்துக்கிட்டது என் பிள்ளைகள் இல்ல... கோபத்தால் நாய்க்கு உயில் எழுதி வைத்த விவசாயி
போங்கயா... உங்க பழக்க வழக்கமே வேண்டாம்... பிள்ளைகள் மீதான கோபத்தால் நாய்க்கு சொத்தை அளித்த விவசாயி!
போபால்: நாய்களை வளர்க்கும் அனைவருக்கும் தெரியும் அது எவ்வளவு நன்றியுள்ளது என்று! இதனாலேயே நாயை வீட்டில் வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் அளித்து வளர்ப்பார்கள்.
அதிலும் மத்தியப் பிரதேசம் மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் நாராயணன் என்ற விவசாயி தனது சொத்தில் ஒரு பாதியைத் தனது 11 மாத நாய்க்கு எழுதி வைத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி ஓம் நாராயணன். இவருக்கு அப்பகுதியில் 18 ஏக்கர் நிலமும், கோடிக்கணக்கில் சொத்தும் உள்ளது.
யாரும் பார்த்துக்கொள்ளவில்லை
50 வயதான இந்த விவசாயி, தனது பாதி சொத்தை இரண்டாவது மனைவிக்கும் மீதி சொத்தை தனது செல்ல நாயான ஜாக்கிக்கும் எழுதி வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது உயிலில், "என் கடைசிக் காலத்தில் யாரும் என்னை ஒழுங்காகப் பார்த்துக்கொள்ளவில்லை.
மனைவியும் நாயும்
எனது மனைவியும், நாயும் மட்டுமே எனக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர், அவர்கள் மட்டுமே என்னை முறையாக பார்த்துக்கொண்டார்கள். இவர்கள் இருவரும் எனது அன்புக்குரியவர்கள். எனது மரணத்திற்குப் பின், எனது சொத்தை இவர்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும்.
நாய்க்குப் பாதி சொத்து
எனது சொத்தில் ஒரு பாதியை நான் எனது இரண்டாம் மனைவிக்கு அளிக்கிறேன். அதேபோல மற்றொரு பாதியை எனது நாய் ஜாக்கிக்கு அளிக்கிறேன். எனது மரணத்திற்குப் பின் யார் எனது ஜாக்கியை பார்த்துக்கொள்கிறார்களோ அவர்களுக்கு எனது சொத்தின் மீதி பாதி செல்லும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் புகார்
விவசாயி நாராயணிக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவி தன்வந்தி வர்மா, இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டாவது மனைவி ஷம்பா வர்மா, இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த உயில் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சவுராய் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.