ரபேல் விவகாரம்: தவறான தகவலால் காங்கிரஸ் தவறாக வழி நடத்தப்படுகிறது.. ராகுலுக்கு அனில் அம்பானி கடிதம்!
ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்களால் காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தப்படுகிறது என ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம் எழுதியுள்ளார்.
மும்பை: ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்களால் காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தப்படுகிறது என ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது.
பின்னர் அந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை பாஜக அரசு மேற்கொண்டது. அதில் அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
ரிலையன்ஸ் ஒப்பந்தம்
ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து கூட்டாக பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு
எனவே, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு ரபேல் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய போதும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார் ராகுல்.
பிரான்ஸ் அரசு விளக்கம்
அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரிய விளக்கம் அளித்தும் ராகுல்காந்தி அதனை ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அரசும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான ஷரத் குறித்து விளக்கமளித்தது.
அனில் அம்பானி கடிதம்
இந்நிலையில், தன் மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ராகுல் காந்தி, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது. ரபேல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது.
எந்த ஒப்பந்தமும் இல்லை
கார்பரேட் நிறுவன போட்டியாளர்கள் சிலர் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு, தவறான தகவல்களை அளித்து, தவறாக இயக்கி, தவறான பாதையில் அழைத்து செல்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இந்திய பாதுகாப்புத்துறைக்கும் இடையே ரபேல் விமான தயாரிப்பு தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படவில்லை.
பிரான்ஸில் தயாரிப்பு
ரபேல் விமானத்தில் இருக்கும் ஒரே ஒரு பாகம் கூட டஸ்சால்ட் - ரிலையன்ஸ் கூட்டு தயாரிப்பு கிடையாது. ஒப்பந்தத்தில் உள்ள 36 ரபேல் போர் விமானங்களின் 100 சதவிகித பாகங்கள் அனைத்தும் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
நிறுத்திக்கொள்ள வேண்டும்
எனவே, ரபேல் விமான ஊழல் தொடர்பாக தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அனில் அம்பானி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.