வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள் எண்ணிக்கை பந்திப்பூரில் அதிகரிப்பு
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் வாகன விபத்துக்களில் சிக்கி வன விலங்குகள் நிறைய உயிரிழக்கும் சூழல் உள்ளது என்றும் அதனால் உடனே அரசு உரிய நடவடிக்கை எடுத்து அரிய வனவிலங்குகளைப் பாதுகாக்கவேண்டும்
பந்திப்பூர்: பந்திப்பூர் வனப்பகுதியில் விபத்துக்களால் இறக்கும் விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வனவிலங்குகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பந்திப்பூர் வனப்பகுதி புலிகள் பாதுகாப்பு சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் உலகப்புகழ் பெற்றதாகும்.
இங்கு யானைகள், சிறுத்தைகள், புலிகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் அதிகம் உள்ளன.பந்திப்பூர் வனப்பகுதி தமிழ்நாடு, கேரளா வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. குண்டலுபேட்டை-ஊட்டி, குண்டலுபேட்டை-கேரளா தேசிய நெடுஞ்சாலைகளும் இந்த வனப்பகுதியின் வழியாக தான் செல்கிறது. இதனால் தினமும் கேரளா, தமிழ்நாட்டில் இருந்து வரும் வாகனங்கள் பந்திப்பூர் வனப்பகுதி சாலை வழியாக தான் செல்கின்றன.
இந்த நிலையில் வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால், வனவிலங்குகள் அடிக்கடி உணவுதேடி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்கும், வனப்பகுதி சாலைக்கும் வருகின்றன. அவ்வாறு வரும்போது வேகமாக வரும் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிரிகரித்து வருகிறது.
இது குறித்து பந்திப்பூர் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
" பந்திப்பூர் வனப்பகுதி வழியாக கேரளா, தமிழ்நாட்டுக்கு காய்கறிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள், லாரி டிரைவர்கள் சோதனை சாவடியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களிடம் பணம் கொடுத்துவிட்டு தடையை மீறி இரவு நேரங்களில் வேகமாக செல்வதாகவும், அதனால் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன. இந்த புகார் முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே சோதனைச்சாவடியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. " என்றார்.