விரைவில் வருகின்றது மனிதர்களுக்கான - விலங்கு உறுப்பு மாற்று சிகிச்சை
டெல்லி: வளர்ச்சி அடைந்து வரும் மருத்துவ உலகின் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் மூலம் இன்னும் சில காலங்களில் விலங்குகள் மனிதர்களுக்கான மாற்று உறுப்புகளை அளிக்கமுடியும் .
அப்படிப்பட்ட மாற்று உறுப்பு தானம் தொடர்புடைய புது நம்பிக்கையை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுவரும் புது ஆய்வில் மரபணு மூலம் உருவாக்கப்பட்ட பன்றிகளின் இதயங்களை எடுத்து பபூன் குரங்குகளுக்கு வைத்துள்ளனர்.
வெற்றிகரமான இதயம்:
இந்த இதயங்கள் 500 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன. இருந்தாலும், உறுப்பு பெறும் மனிதரின் நோய் எதிர்ப்பு அமைப்பு பிற திசுக்களை நிராகரிப்பது ஆய்வாளர்களுக்கு கடினமான சவாலாக இருந்துள்ளது.
மனிதனை ஒத்த உடற்கூறு:
பன்றிகளின் உடற்கூறியல் மனிதர்களை ஒத்திருப்பதாலும், அவை விரைவில் வளரும் தன்மை கொண்டவை என்பதாலும் பன்றிகள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மரபணு மாற்ற இதயங்கள்:
இதன் அடுத்தகட்ட முயற்சியாக குரங்குகளின் இதயங்கள் நீக்கப்பட்டு பன்றிகளின் மரபணு மாற்றப்பட்ட இதயங்களை நேரடியாகப் பொருத்தி விளைவுகள் கண்காணிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தற்காலிக உறுப்புகள்:
இதுபோல் விலங்குகளில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கணையம், நுரையீரல் போன்றவை மனிதர்களுக்கு பொருத்தப்பட முடியும் அல்லது பிறரிடமிருந்து மாற்று உறுப்புகள் கிடைக்கும்வரை இவற்றை தற்காலிகமாக செயல்பட வைக்கமுடியும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.