தமிழகத்துக்கு "அம்மா"ன்னா.. ஆந்திராவுக்கு "அண்ணா".. வயிறு நிறைய சாப்பிடலாம்.. கம்மி விலையில்!
ஹைதராபாத்: தமிழக மக்களின் வரவேற்பைப் பெற்ற அம்மா உணவகம் போல, ஆந்திராவில் அண்ணா கேன்டீன் தொடங்கப்படவுள்ளது. முதல் உணவகத்தை விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழகத்தில் அம்மா உணவகம், ஏழை மக்கள்த தொழிலாளர்களிடையே பிரபலமாக உள்ளது. அரசியல் ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட உணவகம் என்றாலும் கூட இப்போது அது மக்களிடையே பிரபலமாகியுள்ளது. சென்னையில் தொடங்கி தற்போது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது அம்மா உணவகம்.
இந்த நிலையில் இதே பாணியில் ஆந்திராவில் அண்ணா கேன்டீன் வந்துள்ளது. கிட்டத்தட்ட அம்மா உணவகத்தின் ஜெராக்ஸ் காப்பிதான் அண்ணா கேன்டீன். விஜயவாடாவில் முதல் உணவகத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கவுள்ளார். ரூ. 3.5 கோடி செலவில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
விஜயவாடாவின் பிரபலமான ஆட்டோ நகர் பகுதியில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ளன. எனவே அதைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் முதல் அண்ணா கேன்டீன் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த இஸ்கான் கோவில் நிர்வாகத்தினர் இந்த உணவகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளனர். விரைவில் இதேபோல ஆந்திரா முழுவதும் 35 உணவகங்கள் அமைக்கப்படவுள்ளன. ஆட்டோ நகர் உணவகம் ஆகஸ்ட் மாதத்தில் திறந்து வைக்கப்படும் என்று தெரிகிறது.
"அம்மா" என்றால் ஜெயலலிதாவைக் குறிக்கும். அதேபோல ஆந்திராவில் தெலுங்குதேசத்தினர் மத்தியில் அண்ணா என்பது என்டிஆரைக் குறிக்கும். எனவேதான் அண்ணா என்ற பெயரில் கேன்டீன் தொடங்கியுள்ளார் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா கேன்டீனில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு தரப்டும். கூடவே சாம்பார் தரப்படும். அதேபோல சாம்பார் சாதம், எலுமிச்சம் பழ சாதம், தயிர்ச்சாதம் ஆகியவை ரூ. 5க்கு தரப்படும். இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படும்.