மோடிக்கு தான் பிரதமர் என்ற 'ஈகோ'... அன்னா ஹசாரே பொளேர்!
நரேந்திர மோடிக்கு தான் பிரதமர் என்ற அகந்தை இருப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை : மக்கள் பிரச்னைக்காக தான் இதுவரை எழுதிய 30 கடிதங்களில் ஒன்றிற்கு கூட இந்த 3 ஆண்டுகளில் பிரதமர் பதில் அளிக்கவில்லை என்றும் அவருக்கு தான் பிரதமர் என்ற அகந்தையே அதிகம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் மோடிக்கு தான் பிரதமர் என்ற அகந்தை இருப்பதாக கூறினார்.
"மக்கள் பிரச்னைகள் தொடர்பாக நான் இதுவரை பிரதமர் நரேந்திர மோடிக்கு 3 ஆண்டுகளில் 30 கடிதங்களை எழுதியுள்ளேன். ஆனால் அவர் ஒரு கடிதத்திற்குக் கூட பதில் எழுதவில்லை, ஏனெனில் அவருக்கு தான் பிரதமர் என்ற அகந்தை இருக்கிறது" என்றார்.
மேலும் மார்ச் 23ம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஹசாரே அறிவித்தார். இந்த போராட்டத்திற்கான ஆதரவு திரட்டும் பயணத்தை நேற்றைய பொதுக்கூட்டத்தில் இருந்து சாரே தொடங்கியுள்ளார்.
மார்ச் 23ம் தேதி நடக்கப் போகும் போராட்டமானது இதுவரை டெல்லி கண்டிராத போராட்டமாக இருக்கும். என்னுடைய பொதுக்கூட்டம், போராட்டங்கள் மூலம் வாக்காளர்களை ஈர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. லோக்பால் மசோதாவிற்காக மக்கள் எத்தகைய அளவில் கூடி ஆதரவளித்தனரோ அதே போன்று விவசாயிகள் பிரச்னைக்காக நடத்தப்படும் கூட்டத்திற்கும் தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள் என்று ஹசாரே கூறியுள்ளார்.
லோக்பால் மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும், லோக்அயுக்தா நிறுவ வேண்டும், விவசாசிகளுக்கு ரூ. 5 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் நிறுத்தியே தன்னுடைய போராட்டம் என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.