குடியரசு தினத்தன்று அன்னா ஹசாரேவை கொல்வோம் ! மர்மநபர் மிரட்டலால் பரபரப்பு !!
புனே: குடியரசு தினத்தன்று சமூக சேவகர் அன்னா ஹசாரேவை கொல்வோம் என மர்மநபர் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரேவுக்கு நான்கு நாட்களுக்கு முன் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது என்று போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் பங்கஜ் தேஷ்முக் தெரிவித்தார். கையால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறிக் கொண்டு நிறைய பணம் சேர்த்து வைத்துள்ள ஹசாரே தன்னை வாரிசாக அறிவிக்க வேண்டும் என்று கடிதத்தை அனுப்பிய மர்ம நபர் கோரியுள்ளார்.
மேலும், குடியரசு தினம்தான் அவரது வாழ்வில் கடைசி நாளாக இருக்கும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மிரட்டல் கடிதம் குறித்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பார்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதே காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.