நல்லவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.. கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே அட்வைஸ்
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார். நன்னடத்தை மிக்கவர்களை உங்கள் அருகாமையில் வைத்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி நான் அவரிடம் கூறியிருக்கிறேன் என்று அன்னா ஹசாரே தெரிவித்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகம் அமைந்துள்ள தலைமை செயலகத்தில் உள்ள அவருடைய முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரின் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2 நாட்கள் முன்பு திடீரென சோதனை நடத்தினர்.
பிரதமர் மோடியின் தூண்டுதலின்பேரில், தன்னுடைய அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மியினர் போராட்டம் நடத்தினர்.
சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே இவ்விவகாரம் பற்றி மராட்டிய மாநிலத்திலுள்ள சொந்த ஊரான, ராலேகான் சித்தியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: குற்றச்சாட்டுகளை சந்திப்பதற்கு பதிலாக, ராஜேந்திர குமாரின் நடவடிக்கையை முன்கூட்டியே அரவிந்த் கெஜ்ரிவால் சோதித்து பார்த்திருக்க வேண்டும்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார். நன்னடத்தை மிக்கவர்களை உங்கள் அருகாமையில் வைத்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி நான் அவரிடம் கூறியிருக்கிறேன் என்றார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் செயலா? அல்லது ஊழல் புகாரை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கையா? என்பதை விசாரணை வெளிப்படுத்தும். பொதுமக்கள் இதனை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்றார்.