லோக்பாலுக்காக மற்றொரு போராட்டம் வெடிக்கும்.... மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம்
லோக்பாலை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தயார் என்று பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி : லோக்பாலை நிறைவேற்றுவதற்காக இன்னொரு போராட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் லோக்பால் அமைப்பை கொண்டுவர வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
அவரது போராட்டத்துக்கு பெருத்த ஆதரவு கிடைத்தது. இதையடுத்து, லோக்பால் அமைப்பு விரைவில் கொண்டு வரப்படும் என அப்போதைய மத்திய அரசு உறுதி அளித்ததால் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட்டார். எனினும் லோக்பால் சட்டம் கொண்டு வரப்படவில்லை. பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக லோக்பால் அமைப்பு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தது.
செயல்படுத்தவில்லை
ஆனால் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்னும் லோக்பால் அமைப்பு கொண்டு வரப்படவில்லை.
இந்நிலையில், லோக்பால் அமைப்பை கொண்டு வராதது மற்றும் சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்தாதது ஏன் என கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
|
பிரதமருக்கு கடிதம்
80 வயது அன்னா ஹசாரே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ஊழலற்ற இந்தியாவை உருவாக்க லோக்பால் அமைப்பை கொண்டு வர வேண்டும் என்று தலைநக்ர் டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் போராட்டம் நடந்து 6 ஆண்டுகள் முடியும் நிலையிலும் லோக்பால் அமைப்பை அரசு உருவாக்கவில்லை.
பதிலே இல்லை
பாஜக ஆட்சிக்கு வந்தும் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் என்பதை சொல்லும் அரசு லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்று நான் எழுதிய கடிதத்திற்கும் எந்த பதிலும் தரவில்லையே. அதே சமயம் அந்தக் கடிதத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக எனக்கு நினைவில் இல்லை.
அடுத்த போராட்டம்
விரைவில் லோக்பால் அமைப்பை வலியுறுத்தி மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்துவேன். எந்த தேதியில் எந்த இடத்தில் என்னுடைய போராட்டத்தை தொடங்குகிறேன் என்று அடுத்த கடிதத்தில் சொல்கிறேன், என்று ஹசாரே அதில் குறிப்பிட்டுள்ளார்.