நவம்பர் 9ம் தேதி சாய் பாபா கோவில், சிவ சேனா அலுவலகம் வெடிக்கும்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள பிரபல சாய் பாபா கோவிலை வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி குண்டு வைத்து தகர்க்கப் போவதாக கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை கோவில் நிர்வாகத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கோவில் ஊழியர்கள் ஆலயத்திற்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மும்பை தாதார் பகுதியில் உள்ள சிவ சேனா பவன், தாக்கரேக்களின் வீடு, பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடந்த இடமான மதோஸ்ரீ, இந்தூரில் உள்ள கர்ஜன கணேஷ் கோவில் ஆகியவற்றையும் வரும் நவம்பர் 9ம் தேதி தகர்க்கப் போவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தூரில் கலீல் என்பவரும், அவரது உறவினரும் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே இவ்வாறு செய்யப்போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கணேஷ் கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.