கொடநாடு காவலாளி கொலையில் அதிரடி திருப்பங்கள்...சாலை விபத்தில் சிக்கும் குற்றவாளிகள்!
கொடநாடு காவலாளி கொலையில் அடுத்தடுத்த திருப்பங்களாக குற்றவாளிகள் 2 பேர் சாலை விபத்தில் சிக்கியுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் : கொடநாட்டில் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் அடுத்தடுத்து சாலை விபத்தில் சிக்குவது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23ம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்தார்.
இந்தக் கொலை வழக்கு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கேரளாவைச் சேர்ந்த ஒரு குற்றவாளி போலீசாரிடம் சிக்கினார். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் புதிய திருப்பமாக கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரும், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனருமான கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே எடப்பாடியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிகிறது.
காவலாளி கொலையில் திருப்பத்திற்கு மேல் திருப்பங்களாக கேரளாவின் திருச்சூரை சேர்ந்த சயான் என்பவரும் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பாலக்காடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சயான் சிக்கியதாகவும், இதில் சயானுடன் காரில் பயணித்த 2 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த சயான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சயானுடன் காரில் பயணித்தவர்கள் அவரின் குடும்பத்தினர் என்று கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சரின் பங்களாவில் நடந்த கொலைக்கான குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சொல்லி வைத்தார் போல குற்றவாளிகள் அடுத்தடுத்து சாலை விபத்தில் சிக்குவது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை பின்னால் இருந்து அரங்கேற்றியவர்களின் செயல் தானா அடுத்தடுத்த சாலை விபத்துகள் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எழுப்பும் கேள்விகளே விலகாத நிலையில், கொட்அநாடு காவலாளி கொலை மர்மம், காவலாளியைக் கொன்ற குற்றவாளிகளில் சாலை விபத்து மர்மம் என எல்லாமே மர்மமாக உள்ளது.