ஹரிஷ் ராவத் அரசு தலைமீது தொங்கும் கத்தி! மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாய்ப்பு?
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இருப்பினும், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 9 பேரின் தகுதி நீக்க விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், தேவைப்பட்டால் மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்புள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. 70 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பாஜகவுக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் முற்போக்கு ஜனநாயக முன்னணிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அவர்கள் பட்ஜெட் மசோதாவின்போது அரசுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால் அவர்களை சபாநாயகர் கோவிந்த் சிங் தகுதி நீக்கம் செய்தார்.
இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் கே.கே.பாலை சந்தித்து முறையிட்டனர். இதனால் மார்ச் 28ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டார்.
மாநிலத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்ததாலும், ஹரிஷ் ராவத் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தங்களையும் வாக்களிக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில், நைனிடால் ஹைகோர்ட்டும், சுப்ரீம்கோர்ட்டும் அவர்களுடைய மனுவை தள்ளுபடி செய்தன. அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடை விதித்தன.
இந்த 9 எம்.எல்.ஏக்களும் பங்கேற்காமல் 61 உறுப்பினர்களை கொண்டு நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு ஆதரவாக 33 வாக்குகள் கிடைத்தன. இதனால் அரசு தப்பித்தது. உச்சநீதிமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு விவரம் வெளியானது.
இருப்பினும், 9 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லுமா, செல்லாதா என்ற வழக்கில் ஒருவேளை தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், மீண்டும் ஒருமுறை ராவத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோர வேண்டும் எனவும், அப்போது 9 எம்.எல்.ஏக்களும் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே ஹரிஷ் ராவத் அரசின் தலை மீது இன்னும் கத்தி தொங்கிக்கொண்டுள்ளது.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு எதிராக செயல்பட்ட எம்.எல்.ஏக்களை, சபாநாயகராக பதவி வகித்த போப்பையா, தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். எடியூரப்பா அரசு தப்பியது. ஆனால், உச்சநீதிமன்றமோ, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என்ற உள்நோக்கத்தோடு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததால் அது செல்லாது என்று உத்தரவிட்டு எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.