கேரளாவில் தொடரும் சர்ச்சை... மற்றொரு கல்லூரி பாடப் புத்தகத்திலும் மோடி குறித்து அவதூறு
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள மற்றொரு கல்லூரியின் புத்தகத்திலும் பிரதமர் மோடியின் வெளித் தோற்றத்தைக் குறித்து வெறுக்கத்தக்க வாசகங்கள் குறிப்பிடப் பட்டுள்ளதால் மீண்டும் சர்ச்சை உண்டாகியுள்ளது. இது தொடர்பாக அக்கல்லூரி முதல்வர் மற்றும் 11 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்தவாரம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை கேரள மாநிலம், குன்னம்குளத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் வெளியிட்ட மலரில் ‘எதிர்மறையான முகங்கள்' என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருந்தனர். மோடியின் புகைப்படங்களுக்கு அருகே ஹிட்லர், ஒசாமா பின்லேடன், அஜ்மல் கசாப் ஆகியோர் படங்களும் இருந்தது சர்ச்சையை உண்டாக்கியது.
இது தொடர்பாக அந்த பாலிடெக்னிக்கில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த 392 புத்தகங்கள், புத்தகம் வடிவமைக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ‘ஹார்டு டிஸ்க்' போன்றவைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், அப்பாலிடெக்னிக் முதல்வர் கிருஷ்ணன் குட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இந்திய மாணவர் பேரவையை சேர்ந்த மலர் எடிட்டரான மாணவர் உள்பட 6 மாணவர்களை மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.
இந்தச் சர்ச்சை அடங்குவதற்கு முன்னதாகவே, தற்போது கேரளாவில் மற்றொரு கல்லூரியிலும் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் வாசகங்கள் வெளியிடப்பட்டுள்ளது பிரச்சினையை உண்டாக்கியுள்ளது.
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் அறக்கட்டளை சார்பில் குருவாயூரில் இயங்கி வருகிற்து ஸ்ரீ கிருஷ்ணன் கல்லூரி. சமீபத்தில் இக்கல்லூரியில் ஒரு மலர் வெளியிடப்பட்டது. அதில் குருக்கெழுத்துப் போட்டியில் நரேந்திர மோடியின் வெளித்தோற்றம் பற்றி ஆட்சேபகரமான, வெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த பாரதீய ஜனதா கட்சியினரும், கட்சியின் இளைஞர் அணியும் கல்லூரி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தியதில் புத்தகத்தில் மோடி குறித்தான மோசமான வர்ணனை இருந்தது உறுதி செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மற்றும் 11 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, கல்லூரி முதல்வரிடம் கேட்கப் பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.