என்னாச்சு கேரளாவுக்கு.. மேலும் ஒரு பாதிரியார் மீது பலாத்கார புகார்.. 18 மாதங்களில் 12 பேர் கைது!
திருவனந்தபுரம்: கேரளாவில் பாதிரியார்களுக்கு நேரம் சரியில்லை போலும். அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இன்று ஒரு பாதிரியார் மீது 30 வயதுப் பெண் பலாத்காரப் புகார் கொடுத்துள்ளார்.
கடந்த 18 மாதத்தில் மட்டும் 12 பாதிரியார்கள் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம்தான் ஒரு கன்னியாஸ்திரியும், இன்னொரு பெண்ணும் 48 வயதான ரோமன் கத்தோலிக்க பாதிரியார் பிரான்கோ முல்லிக்கல் என்பவர் மீது புகார் கொடுத்திருந்தனர். அதில் கன்னியாஸ்திரியை 2014 முதல் 2016 வரை 13 முறை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் தன்னை பழிவாங்கும் வகையில் வேண்டும் என்றே பொய்ப் புகார் கூறுவதாக கூறியிருந்தார் பாதிரியார். இதுவரை பாதிரியார் கைதுசெய்யப்படவில்லை. பதவியிலும் நீடிக்கிறார். ஜலந்தரில் அவர் பணியாற்றி வருகிறார்.
அதற்கு முன்புதான் மலங்கரா ஆர்த்தோடாக்ஸ் சிரின் சர்ச்சைச் சேர்ந்த 5 பாதிரியார்கள் மீது பாலியல் பலாத்கார புகார் எழுந்தது. பாவ மன்னிப்பு கேட்கப் போன பெண்ணை இவர்கள் பலாத்காரம் செய்து விட்டதாக மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் மேலும் ஒரு பாதிரியார் மீது புகார் எழுந்துள்ளது.
திருவனந்தபுரம் ஆர்த்தோடாக்ஸ் சர்ச்சைச் சேர்ந்த பினு ஜார்ஜ் என்ற பாதிரியார் மீது 30 வயதுப் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதில், 2014ம் ஆண்டு குடும்பப் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கேட்கப் போனபோது அதைத் தீர்த்து வைப்பதாக கூறி பாதிரியார் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக அப்பெண் கூறியுள்ளார்.
ஆனால் ஏன் இத்தனை காலமாக இவர் புகார் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. இருப்பினும் பாதிரியார்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருவது கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18 மாதங்களில் மட்டும் பாலியல் புகார்கள் தொடர்பாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 12 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.