ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர் மரணம்... அமெரிக்க தாக்குதலில் பலியானதாகத் தகவல்
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஏவுகணை தாக்குதலில் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரளாவை சேர்ந்த இளைஞர், அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 20 பேர் கொண்ட குழு, கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்தது. இந்தச் செய்தி இந்தியா முழுக்க பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிக்கு, கேரள குழு ஈரான் நாட்டு வழியாகச் சென்றனர். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வரும் பகுதியில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
அமெரிக்கா இதுவரை நடத்திய தாக்குதலில் கேரளாவில் இருந்து சென்ற மூவர் கொல்லப்பட்டனர். அவர்களின் பெயர் வின்சென்ட் யாகியா, முகமது ஹபீசுதீன் மற்றும் முர்ஷித் முகமது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னொரு கேரள இளைஞர் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், " கேரள இளைஞர் ஐஎஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அவர் பெயர் முகமது மார்வான். இவர் அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அண்மையில் பலியானார். இது தொடர்பான தகவல்களை அவரின் தந்தையிடமிருந்து பெறப்பட்டுள்ளது. முகமது மார்வான் கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர்." என்று தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் அஷ்பக் மாஜித் என்பவர், கடந்த திங்கள் கிழமை மார்வானின் தந்தையிடம் டெலிகிராம் வழியாகத் தொடர்பு கொண்டு, ' ஏவுகணை தாக்குதலில் முகமது மார்வான் உயிரிழந்தார்' எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கேரள மாநிலத்தில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் யார் யார் இருக்கிறார்கள் என்று தீவிரமாக தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.