கசாப்பைப் போலவே உயிருடன் சிக்கிய 2வது பாக் தீவிரவாதி.. பயமே இல்லாமல் சிரித்துப் பேசுகிறான்!
உதம்பூர்: கசாப்புக்கு அடுத்து இந்தியாவில் உயிருடன் சிக்கியுள்ள 2வது பாகிஸ்தான் தீவிவாதி இந்த நவேத் எனப்படும் உஸ்மான் கான் மட்டுமே. இந்தியர்களிடம் சிக்கி விட்டோம் என்று அவனுக்கு சற்றும் அச்சமில்லை. மாறாக சிரித்தபடி இருக்கிறான், படு கேஷுவலாக இருக்கிறான். கேட்கும் கேள்விக்கு எடக்கு மடக்காகவும் பதிலளித்துள்ளான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் அமர்நாத் யாத்ரீகர்களைக் குறி வைத்து நேற்று 2 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் மொமீன் கான் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தீவிரவாதிகள் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தப்பிய தீவிரவாதி, 3 பேரை பிணையாளிகளாகப் பிடித்துக் கொண்டு சென்றான். பின்னர் பிணையாளிகள் சமயோசிதமாக செயல்பட்டு அந்தத் தீவிரவாதியை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்தனர்
பிடிபட்ட தீவிரவாதியிடம் போலீஸாரும், உள்ளூர் மக்களும் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினான். பெயரை மாற்றி மாற்றிக் கூறினான்.
பாகிஸ்தான் நவேத்
இவனது பெயர் முகம்மது நவேத் என்று தெரிய வந்துள்ளது. சொந்த ஊர் பாகிஸ்தானின் பைசலாபாத். வயது 16 என்று முதலில் கூறினான். ஆனால் இவனுக்கு 20களில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பயமே இல்லை
நவேத்திடம் சற்றும் பயம் தெரியவில்லை. படு கேஷுவலாக பேசுகிறான். கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்கிறான்.
பஸ், ரயிலா விட்டிருக்கீங்க
எப்படி இந்தப் பகுதிக்குள் வந்தீர்கள் என்று போலீஸார் அவனிடம் கேட்டபோது, நடந்துதான் வந்தோம். பஸ், ரயிலா விட்டிருக்கீங்க என்று நக்கலாக கேட்டானாம் நவேத்.
2 பேர்தான்
நாங்கள் இருவர் மட்டுமே வந்தோம். நடந்தே வந்தோம். 12 நாட்களாகி விட்டது வந்து. காடுகளில் சுற்றித் திரிந்தோம் என்றும் அவன் கூறியுள்ளான்
திருடிச் சாப்பிட்டோம்
நாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை முதல் 3 நாட்களுக்கு சாப்பிட்டு விட்டோம். அடுத்தடுத்த நாட்களில் வீடு புகுந்து திருடிச் சாப்பிட்டோம்.
அதான் பிடிச்சுட்டீங்களே
சரி அடுத்து உங்களது திட்டம் என்ன என்று போலீஸார் கேட்டபோது, அடுத்து என்ன திட்டமிடுவது அதான் பிடிச்சுட்டீங்களே என்று கேட்டானே பார்க்க வேண்டும்.
பார்க்க கசாப் போலவே முகம்
இந்த நபரைப் பார்த்தால் கிட்டத்தட்ட கசாப் போலவே இருக்கிறான். திட்டமிட்டு ஒரே மாதிரியான முகம் கொண்டவர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனுப்புகிறார்களா என்று தெரியவில்லை. கசாப்புக்கு அடுத்து இந்தியாவில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி நவேத்தான்.