காஷ்மீரில் தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு... லஷ்கர் தீவிரவாதி கைது
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கும் லஷ்கர் அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
புல்வாமா: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கும் லஷ்கர் அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அஹமது மாலிக் என்ற அந்த நபர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறைய சதி செயல்கள் செய்ய திட்டமிட்டு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தொடர்ந்து திடீரென்று சோதனை நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு புல்வாமா பகுதியில் அஹ்மது மாலிக் என்ற 25 வயது இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கும் லஷ்கர் அமைப்பின் முக்கிய தலைவரான அப்துல் நயிமிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இருவரும் அடிக்கடி சந்தித்து உள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரிய அளவில் நாசவேலை நடத்த இவர் திட்டமிட்டு இருக்கிறார். தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு இவரை காஷ்மீரில் இருந்து டெல்லி அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இன்னொரு தீவிரவாதியான ஷேக் அப்துலுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதும், அப்துலுக்கு இவர் நிறைய உதவிகள் செய்து இருப்பதும் கூட கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கைதின் மூலம் காஷ்மீர் பகுதியில் நடக்க இருந்த மிகப்பெரிய சதிவேலை முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களை குறிவைத்தும் இவர்கள் செயல்பட்டுள்ளது தெரிய வந்து இருக்கிறது.