நித்தியானந்தாவுக்கு வலுக்கட்டாயமாக மீண்டும் ஒரு டெஸ்ட் வைக்க சிஐடி போலீஸ் திட்டம்?
பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை சோதனையில் பெங்களூர் சிஐடி போலீஸார் முற்றிலும் அதிருப்தியுடன் உள்ளனர். எனவே மீண்டும் அவருக்கு ஒரு சோதனை நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனராம். இந்த முறை, கடந்த முறை மிஸ் ஆன சில முக்கிய சோதனைகளை வலுக்கட்டாயமாக நித்தியானந்தாவிடம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டு வருகிறார்களாம்.
ஆர்த்தி ராவ் என்ற முன்னாள் சிஷ்யையை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் நித்தியானந்தாவிடம் பெங்களூர் அரசு விக்டோரியா மருத்துவமனையில் செப்டம்பர் 8ம் தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
பல மணி நேரம் நடந்த சோதனைக்குப் பின்னர் சோர்ந்து போய் வெளியே வந்தார் நித்தியானந்தா. அவரிடம் முறைப்படி அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் சோதனைக்கு நித்தியானந்தா சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என்றும் விந்தணு மாதிரி எடுக்கப்படவில்லை என்றும் அதை கொடுக்க நித்தியானந்தா உடன்படவில்லை என்றும், மேலும் சில முக்கிய சோதனைகளுக்கு அவர் உடன்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
அவருக்கு சோதனை நடத்திய மருத்துவக் குழுவினரும் விந்தணு மாதிரி எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். அதுதான் ஆண்மை சோதனையில் முக்கியமானது என்பதால் இந்த சோதனையின் முடிவு சொதப்பலாகவே இருக்கும் என்று பெங்களூர் சிஐடி போலீஸார் நம்புகிறார்கள்.
இதையடுத்து சட்டத்தின் உதவியுடன் நித்தியானந்தாவுக்கு மீண்டும் சோதனை நடத்துவது, இந்த முறை வலுக்கட்டாயமாக அவரிடம் விந்தணு உள்ளிட்டவற்றை பெற்று சோதனைக்குள்ளாக்குவது என்ற முடிவுக்கு போலீஸார் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 53வது பிரிவு இந்த வலுக்கட்டாய சோதனைக்கு அனுமதி அளிப்பதாக கூறுகிறார்கள்.
வலுக்கட்டாய சோதனைக்கு நித்தியானந்தா உட்படுத்தப்படுவாரா அல்லது அவரும் சட்டத்தின் உதவியை நாடி தப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.