எல்லையில் இந்திய ராணுவம் ஆவேச பதிலடி.. பதுங்கு குழிகள் தாக்கி அழிப்பு.. 7 பாக். வீரர்கள் பலி
பாகிஸ்தான் ராணுவத்தின் முஜாகிதீன் பட்டாலியனை சேர்ந்த பல வீரர்கள் அங்குள்ள பதுங்கு குழிகளில் இருந்துள்ளனர். இந்திய ராணுவம் இந்த பதுங்கு குழிகளை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
டெல்லி: இந்திய வீரர்களை தாக்கிய பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம் இரு இந்திய ராணுவ வீரர்களை தாக்கி கொடூரமாக கொலை செய்தது. மே 1ம் தேதி இத்தாக்குதல் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே இந்திய ராணுவம் கடும் பதில் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ வீரர்களை நோக்கி நடத்தியுள்ளது.
எல்லை தாண்டிய தாக்குதல் நடைபெற்ற கிருஷ்ண காட்டி செக்டாருக்கு நேர் எதிரேயுள்ள பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.
பதுங்கு குழிகள் அழிப்பு
பாகிஸ்தான் ராணுவத்தின் முஜாகிதீன் பட்டாலியனை சேர்ந்த பல வீரர்கள் அங்குள்ள பதுங்கு குழிகளில் இருந்துள்ளனர். இந்திய ராணுவம் இந்த பதுங்கு குழிகளை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
பதிலடி
இந்த பதிலடி தாதக்குதலில் பல பாகிஸ்தான் ராணுவத்தினர் படுகாயமடைந்தனர். அதில், 7 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக கடும் பதிலடியை கொடுக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததும் இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
கடந்த ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர எல்லைக்குள் அதிகாலை நேரத்தில் அததிரடியாக நுழைந்த இந்திய ராணுவத்தினர், அங்கு பதுங்கியிருந்த 35 தீவிரவாதிகளை கொன்று திரும்பி ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரங்கேற்றினர்.
நெருக்கடி அதிகரிப்பு
இதன்பிறகு தற்போது நடைபெற்ற தாக்குதலும் இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு, சமூக வலைத்தளங்களில் இந்திய அரசுக்கு மக்கள் கோரிக்கைவிடுத்துவரும் நிலையில், வெளியே தெரியாமல் இத்தாக்குதல் நடந்துள்ளது. இத்தாக்குதல் விவரத்தை சம்பவ இடத்திலுள்ள ராணுவ வட்டாரங்கள் உறுதி செய்தபோதிலும், இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு பீதி
இந்திய ராணுவத்தின் வீரமிகு பதிலடி தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தினர் மத்தியில் பீதி நிலவுவதாக எல்லையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தின் தாக்குதல் இன்னும் உக்கிரமடையலாம் என பாகிஸ்தான் உளவு துறை அந்த நாட்டு அரசை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.