இன்னொரு சர்ஜிகல் ஸ்டிரைக்? மியான்மருக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல்
மியான்மருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
Recommended Video
கோஹிமா: மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியிருந்தது. இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது.
இந்த நிலையில் சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோவை ராணுவம் வெளியிட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மியான்மருக்குள் நுழைந்து கடந்த புதன்கிழமையன்று இந்திய ராணுவம் மற்றொரு சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்தியிருக்கிறது.
நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாத இயக்கமான என்.எஸ்.சி.என்.(கப்லாங்) தீவிரவாதிகள் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அண்மையில் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
மற்றொரு தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் படுகாயமடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இத்தாக்குதலை என்.எஸ்.சி.என்.(கப்லாங்) தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் இசாக் சுமி உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சென்மோ என்கிற எல்லை கிராமத்தைக் கடந்து இந்திய ராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் மியான்மருக்குள் நுழைந்தனர். சர்வதேச எல்லையில் இந்திய ராணுவத்தைத் தடுக்கும் வகையில் எங்கள் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இருதரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றது எனக் கூறியுள்ளார்.