ஏர்செல்-மேக்சிஸ்: மலேசியா அனந்தகிருஷ்ணன் ஆஜராகாததால் சுப்ரீம் கோர்ட் மீண்டும் கண்டிப்பு!
டெல்லி: மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் வற்புறுத்தியுள்ளது.
மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்தில் ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி அதன் அதிகப்படியான பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்தார் என்பது குற்றச்சாட்டு. சுமார் ரூ.742 கோடி மதிப்புள்ள லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றம்சாட்டப்படும் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது.
மேக்சிஸ் உரிமையாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கு எதிராக சம்மன் அனுப்பியும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கடந்த மாதம் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.
"இந்தியாவின் வளங்களில் இருந்து வருமானத்தை அனுபவித்துவிட்டு நீங்கள் ஓடி ஒழிய முடியாது. கோர்ட் சம்மனை மதித்தே ஆக வேண்டும்" என கூறிய உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என கூறி, வழக்கை பிப்ரவரி 3ம் தேதியான இன்றைக்கு வழக்கை தள்ளி வைத்திருந்தது.
முன்னதாக, ஏர்செல் உரிமையாளர்கள் மற்றும் கன்ட்ரோலர் கோர்ட்டில் ஆஜராக மறுத்தால், இன்னும் 2 வாரத்திற்குள் ஏர்செல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முடக்கப்பட்டு மாற்றிவிடப்படும் எனவும் கோர்ட் எச்சரித்தது. மேலும் அடுத்த உத்தரவை பிறப்பிக்கும் வரையில், ஏர்செல்-மேக்சிஸ் நிறுவன வருமானம் முடக்கப்படும் எனவும், உரிமையாளர்களுக்கு அது போய் சேரக்கூடாது எனவும் கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் மலேசியாவை சேர்ந்த இரு முன்னணி நாளிதழ்களில் கோர்ட் உத்தரவு குறித்த விவரத்தை வெளியிட மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரிலையன்ஸ் கம்யூனிகேசன் வயர்லெஸ் மற்றும் ஏர்செல் ஆகியவற்றின் இணைவுக்கு சம்மதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது.
மேக்சிஸ் உரிமையாளர் இந்திய சட்டத்தை மதித்து கோர்ட்டில் ஆஜராகும்வரை இந்த டீலுக்கு ஒப்புதல் தர முடியாது என்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு கூறிவிட்டது. இப்படியே அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ள நால்வரும் கோர்ட்டுக்கு வராமல் இருந்தால் ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரமை ஏலம் விடுமாறு உத்தரிவட வேண்டிவரும் என்று நீதிபதிகள் கண்டித்தனர்.
மேலும், வரும் வெள்ளிக்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.