"என்னுடைய வடகிழக்கு.. உங்களின் பாசிச கைகளை எடுங்க" அஸ்ஸாமில் தனி ஒருத்தியாக அதிரவைத்த சிறுமி
குவஹாத்தி: அஸ்ஸாமில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட குவஹாத்தில், சுற்றிலும் ராணுவத்தினருக்கு நடுவே குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக தனியொருவராக சிறுமி போராடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது. இந்த மசோதா சட்டமாகியுள்ள நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் தங்கள் மண்ணில் தங்களுக்கு உள்ள உரிமை பறிபோய் விடும் என்று அச்சத்தில் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநில மக்கள் உள்ளார்கள்.
குடியுரிமை சட்டம்- திமுகவினர் போராட்டம்- நகலை கிழித்து எறிந்தார் உதயநிதி- ஆயிரக்கணக்கானோர் கைது
பல்லாயிரம் மக்கள்
வங்க தேசத்தில் இருந்து அகதிகளாக வந்த பல்லாயிரம் பேர் வடகிழக்கு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைத்தால் வேலை வாய்ப்பு, உள்பட பல்வேறு உரிமைகள் பாதிக்கப்படும் என்பது வடகிழக்கு மாநில மக்களின் அச்சம்.
வீதிகளில் இறங்கினர்
இதனால் ஆரம்பம் முதலே வடகிழக்கு மாநில மக்கள் குடியுரிமை திருத்த மசோதாவை வலிமையாக எதிர்த்து வந்தனர். இப்போது சட்டம் நிறைவேற்றப்பட்டதால் கொதித்து எழுந்து வீதிகள் தோறும் போராட்டத்தில் மக்கள் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தை எந்த அமைப்பும் முன்னின்று நடத்துவதாக தெரியவில்லை.
போக்குவரத்து முடக்கம்
பல ஆயிரம் மக்கள் போராட்டத்தில் குதித்து இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரான குவஹாத்தியில் விமான சேவைகள், ரயில் சேவைகள், போக்குவரத்து என அனைத்தும் அடியோடு முடங்கி உள்ளது.
துப்பாக்கிச்சூடு
இதனால் ராணுவமே அங்கு களம் இறங்கி அணி வகுப்பு நடத்தி வருகிறது. இதுவரை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளார்கள். நிலைமை மோசம் அடைவதை தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
தனி ஒருத்தி
இந்நிலையில் குவஹாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் ராணுவத்தினர் சுற்றி உள்ள நிலையில், சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தனி ஒருவராக பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினார்.
சிறுமி ஆவேசம்
அந்த சிறுமி தனது கையில் வைத்திருந்த பதாகையில், அரசியல் அமைப்புச் சட்டம், தற்போது தேவைக்கு அதிகமானதாகிவிட்டது. என்னுடைய வடகிழக்கு மாநிலங்களிலிருநது உங்களின் பாசிச கைகளை எடுங்கள்" என்று எழுதியிருக்கிறார்.