ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் திடீர் திருப்பம்.. அடிப்படையே தவறாம்
டெல்லி: ராகுல் காந்தி மீது ஆர்எஸ்எஸ் தொண்டர் தாக்கல் செய்த அவதூறு மனுவில் நடைமுறை சிக்கல் உள்ளதாக நீதிபதிகள் கூறினர். அவதூறாக பேசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அவதூறு வழக்கில் வாதிதான் ஆதாரத்தை காட்ட வேண்டும். காவல்துறை விசாரணை கூடாது என சுட்டி காட்டினர்.
கடந்த 2014-ம் ஆண்டு தானேவில் நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்.தான் என குறிப்பிட்டார்.
இதுகுறித்து, தானே மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ராஜேஷ் குண்டே சார்பில் பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுத்தார்.
தடை கேட்டார்
இந்த வழக்கில், ராகுல் காந்தியை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார்.
மன்னிப்பு
இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ராகுல் காந்தி மன்னிப்பு கோரினால் வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தனர்.
முடியாது
ஆனால், ராகுல் காந்தி தரப்பு இந்த யோசனையை நிராகரித்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நாதுராம் கோட்சே, காந்தியை கொன்றார் என்பதற்கும், ஆர்.எஸ்.எஸ், காந்தியை கொலை செய்தது என்பதற்கும் வேறுபாடு உள்ளது. எனவே, ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அடிப்படையில் தப்பு
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நிலைமை மாறியிருந்தது. ஆர்எஸ்எஸ் தொண்டர் தாக்கல் செய்த மனுவில் நடைமுறை சிக்கல் உள்ளதாக நீதிபதிகள் கூறினர். அவதூறாக பேசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அவதூறு வழக்கில் வாதிதான் ஆதாரத்தை காட்ட வேண்டும். காவல்துறை விசாரணை கூடாது என சுட்டி காட்டினர்.