காஷ்மீரில் பண்டிட்களுக்கு “ஸ்மார்ட் சிட்டி” கோரும் நடிகர் அனுபம் கெர்
மும்பை: காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களுக்கு தனியாக ஸ்மார்ட் நகரம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என பிரபல நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார்.
ரூட்ஸ் இன் காஷ்மீர் என்ற அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் "சட்டப்பிரிவு 370, பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் இடம் வாங்குவதை தடை செய்கிறது. எனவே அந்த சட்டத்தை நீக்கவேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்ட பண்டிட்களை அங்கு மீண்டும் குடி அமர்த்தவேண்டும். அதற்காக தனியாக ஒரு ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் மத்திய அரசு காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களுக்கு தனியாக ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கும் யோசனையை முன் மொழிந்தது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் அம்மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.