சகிப்புத்தன்மை இருக்கிறது.... மோடி அரசுக்கு ஆதரவாக இந்தி நடிகர் அனுபம்கேர் தலைமையில் போட்டி பேரணி
டெல்லி: நாட்டில் சகிப்புத்தன்மை இருக்கிறது என்று பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவாக இந்தி நடிகர் அனுபம்கேர் தலைமையில் டெல்லியில் போட்டி பேரணி நடத்தப்பட்டது.
நாட்டில் சகிப்பு தன்மையற்ற நிலை நிலவுவதாக கூறி டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இதற்கு போட்டியாக இந்தி நடிகர் அனுபம்கேர், இயக்குநர் மதுர் பண்டார்கர், பாடகி மாலினி அவஸ்தி உள்ளிட்டோர் பங்கேற்ற பேரணி டெல்லியில் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இது குறித்து நடிகர் அனுபம்கேர் கூறுகையில், இந்தியாவில் சகிப்புத்தன்மை உள்ளது. எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் விருதுகளை திருப்பி அளிப்பதை விட தங்களது பிரச்சனைகளை அரசிடம் தெரிவிப்பதே சரியானது.
அனைத்து நாட்டிலும் உள்நாட்டு பிரச்சனைகள் இருக்கிறது. இதனை சர்வதேச பிரச்சனையாக்குவது அர்த்தம் இல்லை. இந்த நாட்டில் சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதை ஜனாதிபதியிடம் தெரிவிக்க எங்களுக்கும் உரிமை உள்ளது என்றார்.