அமைச்சரின் பலான வீடியோ வெளியிடுவேன்.. பாதிக்கப்பட்ட பெண் டி.எஸ்.பி பேஸ்புக்கில் வார்னிங்!
பெங்களூர்: அமைச்சர் பரமேஸ்வர் நாயக் தொடர்பாக இரவில் மட்டுமே பார்க்க கூடிய வீடியோக்களை வெளியிடுவேன் என்று அவரால் பாதிக்கப்பட்டு பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படும், கர்நாடக பெண் போலீஸ் டி.எஸ்.பி அனுபமா ஷெனாய் கூறியுள்ளார்.
கனிம வளம் மிக்க பெல்லாரி மாவட்டம் எப்போதுமே தப்பான காரணங்களுக்கான செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும். பாஜகவை சேர்ந்த ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களுடனான சுஷ்மா சுவராஜின் நட்பு ஆகியவை ஒரு காலத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி வந்தது.
தொடர் போராட்டங்களுக்கு பிறகு, ரெட்டி சகோதரர்கள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெரும் செல்வந்தரான முன்னாள் அமைச்சர், ஜனார்த்தன ரெட்டி மூன்று வருடங்களாக சிறையில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளார்.
அமைச்சர் மீது புகார்
இப்போது காங்கிரஸ் அரசாங்கத்திலும் பெல்லாரி பேசு பொருளாகியுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சரான பரமேஸ்வர் நாயக் அம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை அங்குள்ள கனிம மற்றும் சாராய லாபி வளைத்துப்போட்டுக் கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
பெண் டிஎஸ்பி ராஜினாமா
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், திறமையான பெண் டிஎஸ்பி என பெயர் எடுத்திருந்த அனுபமா ஷெனாய், சில தினங்களுக்கு முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாவட்டத்தின் கூட்லகி சரகத்தில் இவர் பணியாற்றி வந்த நிலையில், அனுபமா ராஜினாமா, அரசியல் புயலை கிளப்பியுள்ளது.
தலைமறைவு
அனுபமா ஷெனாய் இப்போது எங்கிருக்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. போலீஸ் தனிப்படை அமைத்து தேடி வருகிறது. தனக்குத்தானே தலைமறைவு வாழ்க்கையை பரிசாக அளித்துள்ள அனுபமா ஷெனாய் தனது பேஸ்புக் பக்கத்தில், கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் அனுபமா ஷெனாய்க்கு ஆதரவு பெருகி வருகிறது.
ராத்திரியில் மட்டும்
நேற்று வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில், "நான் ராஜினாமா செய்துவிட்டேன்.. பரமேஸ்வர் நாயக் எப்போது ராஜினாமா செய்வார்" என கேட்டிருந்த அனுபமா ஷெனாய், அமைச்சர் பற்றி ஆடியோ, வீடியோ தன்னிடமிருப்பதாகவும், அதை 'இரவில் மட்டுமே' பார்க்க முடியும் என்றும் கூறியிருந்தார். இதில் எது உங்களுக்கு வேண்டுமோ அதை வெளியிடுகிறேன் என்று தனது பேஸ்புக் ஃபாலோவர்களை அவர் கேட்டிருந்தார்.
அமைச்சர் மறுப்பு
இந்நிலையில், மாலையில் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், அந்த வீடியோவை சிறுவர்கள் நலன் கருதி தற்போது வெளியிடவில்லை என்று கூறியிருந்தார். இதுகுறித்து பரமேஸ்வர் நாயக்கிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அனுபமா ஷெனாய் பதவியை ராஜினாமா செய்ததற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
முதல்வர் உத்தரவு
கூட்லகி தாலுகாவில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் வறட்சி நிலவுகிறது. இதில் சாராய லாபிக்கு எங்கே போவது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பரமேஸ்வர் நாயக் தெரிவித்துள்ளார். அமைச்சர் மீதான குற்றச்சாட்டு குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்ய பணித்துள்ளார் முதல்வர் சித்தராமையா.