தாயால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவரை அமைச்சராக்கிய மோடி! 'யங்' அமைச்சர் அனுப்பிரியாவின் பின்னணி
டெல்லி: மோடியின் அமைச்சரவையில், 35 வயதுள்ள இளம் அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார், பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த அனுப்பிரியா பட்டேல்.
அனுப்பிரியா பட்டேல் உத்தர பிரதேச மாநிலம், மிசாஜாபூர் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர். இவரது தந்தை சோன் லால் பட்டேல். இவர் தொடங்கிய அப்னா தள் கட்சியின் பொதுச்செயலாளராக அனுப்பிரியா பட்டேல் உள்ளார்.
சோன் லால் பட்டேல் மறைவை தொடர்ந்து 2009ல் அனுப்பிரியா இந்த பதவியை ஏற்று கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயன்றார். ஆனால், வேடிக்கை என்னவென்றால், கட்சியின் தலைவரான அனுப்பிரியாவின் தாயார், கிருஷ்ணாவே தனது மகளை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
கட்சியை பாஜகவோடு ஐக்கியமாக்கினால் மத்திய அமைச்சர் பதவியை அனுப்பிரியாவுக்கு வழங்குவதாக பாஜக மேலிடம் கூறியதற்கு அனுப்பிரியா ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் தாயார் கிருஷ்ணா ஒப்புக்கொள்ளாததுதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
கட்சி யாருக்கு சொந்தம் என்ற ரீதியிலான இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையிலுள்ளது. இந்நிலையில்தான் அனுப்பிரியாவுக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்தை வழங்கியுள்ளார் மோடி.
உ.பி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அனுப்பிரியா தனிக் கட்சி தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எம்.பியாவதற்கு முன்பாக, இவர் வாரன்சி ரோகினா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றிக்கொண்டிருந்தார்.