இனி தட்கல் முன்பதிவுக்கு அடையாள அட்டை தேவையில்லை...செப்டம்பர் 1 முதல் அமல்...
டெல்லி : ரயில் பயணிகள் டிக்கெட் கவுண்டரில் தட்கல் முன்பதிவு செய்யும் போது இனி அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தட்கல் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்கள் அடையாள அட்டையின் நகலை முன்பதிவு விண்ணப்படிவத்தோடு சமர்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வருகிறது. தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் போது கவுண்டரில் காண்பிக்கும் அதே அடையாள அட்டையை மட்டுமே பயணம் செய்யும் போதும் டிக்கெட் பரிசோதகரிடம் காண்பிக்க வேண்டும்.
இதனால், டிக்கெட் பதிவு செய்யும் போது காண்பிக்கும் அடையாள அட்டையை தவிர்த்து மாற்று அடையாள அட்டைகளை காண்பித்தால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதனால், பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்த பிரச்சினையை போக்க வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட்டை ரயில்வே கவுண்டர்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ முன்பதிவு செய்யும் போது அடையாள அட்டையின் நகல் அல்லது அடையாள அட்டை எண் வழங்க தேவையில்லை.
எனினும் பயணம் செய்யும் போது பயணிகள் கண்டிப்பாக அசல் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொலைதூரப் பயணங்களுக்கு ஆன்லைன் மூலமும், முன்பதிவு மையங்கள் மூலமும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது காண்பிக்கும் அதே அடையாள அட்டையைதான் பயணம் செய்யும் போது காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.