பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக குரல் கொடுத்தால் கொலை... சோனியா, ராகுல் பாய்ச்சல்! #gaurilankeshmurder
பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் கொல்லப்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லி : பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மிரட்டப்படுவது அல்லது கொல்லப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் நேற்று பெங்களூருவில் தன்னுடைய வீட்டு வாசலிலேயே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கவுரி லங்கேஷின் கொலை செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் "எந்த அச்சமுமின்றி சுதந்திரமாக தன்னுடைய கருத்துகளை எழுதுபவர் கவுரி லங்கேஷ். பகுத்தறிவுவாத சிந்தனையோடு சுதந்திரமான முறையில் கருத்துகளை வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். மாற்று சிந்தனைஉடையவர்கள் இந்த நாட்டில் வாழ முடியாது என்று அச்சுறுத்தும் விதமாக இந்தக் கொலைகள் அரங்கேறுகின்றன, இது பொறுத்துக்கொள்ளவே முடியாத ஒரு விஷயம்."
விடாபிடித்தனத்தின் கோர முகம்
ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் சவாலாகவே இது உள்ளது, எதையும் ஏற்றுக்கொள்ளாத விடாபிடித்தனம் தனது கோர முகத்தை சமூகத்தில் காட்டுகிறது. அதற்கான வெளிப்பாடாகவே பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை பார்க்க முடிவதாக சோனியா காந்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
எதிர்ப்பவர்கள் கொலை
இதே போன்று பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக/ஆர்எஸ்எஸ்க்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டு, தாக்கப்பட்டு இறுதியில் கொலையும் செய்யப்படுகிறார்கள். இந்தியாவின் இயற்கைக்கு எதிர் நிலையை கொண்டு வர பாஜக முயற்சி செய்கிறது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க
கவுரி லங்கேஷை கொன்றவர்களை உடனடியாக பிடித்து தக்க தண்டனையை வழங்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவை நான் கேட்டுக்கொண்டுள்ளேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இது குறித்து முதல்வர் சித்தராமையாவிற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
|
தொடர் கொலைகள்
சமூகத்தில் நிலவும் அவலங்களை வெளிக்கொண்டுவரும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவது இது முதல்முறை அல்ல, இதற்கு முன்பு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்துக்களை விமர்சித்து வந்த நரேந்ததிர தபோல்கர் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அதே ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி கோவிந்த் பன்சாரே சுடப்பட்டு நான்கு நாட்கள் கழித்து அவர் மரணமடைந்தார்.
ஜனநாயக குரல்வலை நெரிப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து மீண்டும் பெங்களூருவில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது ஜனநாயக சுதந்திரத்தின் குரல்வலையை நெரிக்கும் செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.