கிறிஸ்தவர்களை முறைத்தால் கண்களை பிடுங்கிவிட்டுருவோம்... சீறும் சித்து!
Recommended Video
சண்டிகர்: கிறிஸ்தவர்களை முறைத்து பார்த்தாலே அவர்கள் கண்கள் பிடுங்கி எடுக்கப்படும் என்று பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து தெரிவித்துள்ளார்.
கேப்டன் அம்ரீந்தர் தலைமையில் பஞ்சாபில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. பஞ்சாப் அரசு சார்பில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநில அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து பங்கேற்றார்.
பாஜகவில் இருந்த இவர் 2016ல் அக்கட்சியை விட்டு விலகினார். பஞ்சாப் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவிருந்த சில வாரங்கள் முன்பாக இவர் காங்கிரசில் இணைந்து வெற்றி பெற்று அமைச்சருமாகிவிட்டார்.
பிஷப் ஆதங்கம்
சித்து பங்கேற்ற இந்த விழாவில் முன்னதாக பேசிய ஜலந்தர் பகுதியின் ரோமன் கத்தோலிக் சபை தலைவர் பிஷப் பிரான்கோ முல்லகால், "நாட்டின் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடவும் இடையூறு செய்யப்படுகிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் பண்டிகைகளை கொண்டாடுவது என்பது அடிப்படை உரிமை.
பஞ்சாப் நல்ல மாநிலம்
அதேநேரம், பஞ்சாப்பில் கிறிஸ்தவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. இங்கு சுதந்திரமாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடிகிறது. என்றார் அவர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கூடாது என சில மாநிலங்களில் வலதுசாரி இந்து அமைப்பினர் எச்சரித்த நிலையில், பிஷப் இவ்வாறு பேசினார்.
சித்து பேச்சு
பின்னர் கூட்டத்தில் பேசிய சித்து, அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை உள்ளது. மத வழிபாடுகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசு உறுதுணையாக இருக்கும். அமிருதசரஸ் பொற்கோவில் வாசல் அனைத்து மதத்தினருக்காகவும்தான் திறந்துள்ளது. அதுபோலத்தான் நமது அரசியல் சாசன சட்டமும் மத சுதந்திரம் வழங்கியுள்ளது.
கண்கள் பிடுங்கப்படும்
பஞ்சாப்பில் கிறிஸ்தவர்களை யாராவது முறைத்து பார்த்தால் அவர்கள் கண்களை தோண்டி எடுத்துவிடுவோம். இவ்வாறு சித்து பேசினார். கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்து கொலை செய்யப்படுவதை கண்டித்து ம.பி. பாஜக நிர்வாகி ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு எச்சரிக்கைவிடுத்து பேசியபோது பயன்படுத்திய அதே வார்த்தையை, சித்து இப்போது கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.