ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து... ஏப்ரல் 20ல் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 20ல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.
ஹைதராபாத் : ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 20ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த வழங்க வேண்டும் என்று அந்த மாநிலத்தை சேர்ந்த ஆளும் கட்சியான தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அளிக்கப்பட்ட ஆந்திரா சிறப்பு அந்தஸ்து உறுதியானது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் நிறைவேற்றப்படவில்லை.
2019ல் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் என முடிந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார் சந்திரபாபு நாயுடு.
எனினும் மத்திய அரசு ஆந்திர மாநிலத்தின் கோரிக்கையை ஏற்றதாக தெரியவில்லை, இந்நிலையில் சந்திரபாபு தலைமையில் ஏப்ரல் 20ல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தெலுங்குதேசம் கட்சியின் சார்பில் இந்த உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.