தெலுங்கானா விவகாரம்: ஆந்திர முதல்வர் ராஜினாமா, காங்கிரஸில் இருந்தும் விலகல்
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார்.
தெலுங்கானாவை தனி மாநிலமாக்க ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே தெலுங்கானா மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து கிரண் குமார் ரெட்டி தனது பதவியை இன்று ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். அவர் தனி கட்சி துவங்கலாம் என்றும், அவரது ஆதரவாளர்களின் கட்சியில் சேரலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக ரெட்டி தனது பொருட்களை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டார். மேலும் அவரது அரசு வீட்டில் உள்ள பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவை முடக்குவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.