அரசு குறித்து பொய்யான.. அவதூறான செய்தி வெளியிட்டால் ஊடகங்கள் மீது வழக்கு.. ஆந்திராவில் சட்டம்
அமராவதி: தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து தவறான, பொய்யான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடரப்படும் என ஆந்திரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசுக்கு எதிராக பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்க 2007ம் ஆண்டு மறைந்த ராஜசேகர் ரெட்டி (இப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை) முதல்வராக இருந்து சட்டம் கொண்டு வந்தார்.
இந்த சட்டம் கடும் எதிர்ப்பு காரணமாக அப்போது அமல்படுத்தப்படவில்லை இந்நிலையில் இப்போது அந்த சட்டம் சில திருத்தங்களுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
விமர்சித்தால் வழக்கு
இதன்படி அரசு குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சித்தால், அரசு குறித்து பொய்யான கருத்துக்களை தொலைக்காட்சிகள் பரப்பினால், அரசு குறித்து தவறான செய்திகளை நாளேடுகள் வெளியிட்டால் இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எச்சரிக்கை
இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், " தவறான, ஆதாரமற்ற மற்றும் அவதூறான செய்திகளை திட்டமிட்டு ஆர்வத்துடன் பரப்புவதன் மூலம் சில அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே அரசாங்கத்தின் மற்றும் அதன் அதிகாரிகளின் பிம்பத்தை கெடுக்க முயற்சிப்பதாக அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளன.
ஆணையருக்கு அதிகாரம்
உண்மையான மற்றும் சரியான தகவல்கள் மக்களுக்கு எட்டப்படுவதைக் காண, சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளின் கீழ் வழக்குகளைத் தாக்கல் செய்ய அரசு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சிறப்பு ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது,
ராஜசேகர் ரெட்டி
முன்னதாக ராஜசேகர் ரெட்டி கொண்டு வந்த சட்டத்தில் பத்திரிக்கைகளின் பதிப்பாளர், ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக தலைமை தகவல் ஆணையர்கள் தான் வழக்குத் தொடர முடியும் என்ற நிலை காணப்பட்டது. இப்போது புதிய சட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்கூட சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க முடியும்.
ஜெகன் ஒப்புதல்
இந்த மாத தொடக்கத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெகன் அரசு இந்த முடிவுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது, மேலும் டிவி 5 மற்றும் ஏபிஎன் ஆந்திர ஜோதி ஆகிய இரண்டு தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற தடை விதித்தது.