ஆந்திராவில் ஆட்டோ.. கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10000 ஊக்க தொகை.. ஜெகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டி சுயதொழில் செய்து வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் பல்வேறு அதிரடியாக மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதேபோல் ஆந்திர மாநிலத்தில், விவசாயிகளுக்கு தலா ரூ.12,000 வழங்கும் திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
1.26லட்சம் பேருக்கு
அண்மையில் ஆந்திராவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு அரசுப்பணி வழங்கி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய வரலாற்றை படைத்தார்.
அரசே மதுவிற்பனை
இதேபோல் ஆந்திராவில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்த ஜெகன் மோகன் ரெட்டி, மது விற்கும் நேரத்தையும் குறைத்து அதை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்தார். இன்னும் சில ஆண்டுகளில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சாலை வரி அதிகம்
இந்நிலையில் இன்று ஆந்திராவில் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்து உள்ளார். பாதயாத்திரை சென்ற போது, ஜெகன் மோகன் ரெட்டியிடம் வாகன தகுதிச் சான்று, இன்சூரன்ஸ்,சாலை வரி அதிகமாக உள்ளதாக ஓட்டுனர்கள் தெரிவித்து இருந்தார்கள்
சொன்னதை செய்த ஜெகன்
இதையடுத்து ஓட்டுனர்களின் கோரிக்கையை ஏற்று வாகன பராமரிப்பு மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.10,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் உறுதி அளித்திருந்தார். தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று வாடகை கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார். ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 93 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.