அப்பா கொண்டு வந்த சட்டம்... 12 ஆண்டுகளுக்கு பின்பு அமல்படுத்திய மகன்.. ஜெகன் அதிரடி
அமராவதி: ஆந்திர அரசு பற்றி தவறாகவோ, ஆதாரமற்ற செய்திகளையோ வெளியிட்டால் ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக உணரும் ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
தவறான செய்தி வெளியிடும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு அதிகாரம் அளித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
புதுமைத் திட்டங்கள்
ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் அம்மாநிலத்தில் பல்வேறு புதுமைத் திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். அதற்கு உதாரணமாக அண்மையில் அவர் அறிவித்த நீண்டகால நோயாளிகளுக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கூறலாம். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் பத்தாயிரம் வழங்கும் திட்டத்தையும் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இப்படி புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ஜெகன்.
எதிர்ப்பு
செய்தி நிறுவனங்கள், வார இதழ்கள், மின்னணு ஊடகங்கள், நாளேடுகளில் அரசுக்கு எதிரான செய்திகளை தவிர்க்க, கடந்த 2007-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர் ரெட்டி புதிய சட்டம் கொண்டுவந்தார். ஆனால் அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியது. அதற்குள் அவர் ஹெலிகாப்டர் விபத்தி சிக்கி மறைந்துவிட்டதால் அந்தச் சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. அதன் பிறகு 12 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது அதனை தூசு தட்டி எடுத்துள்ளார் ஜெகன்.
திருத்தம்
இந்நிலையில் தந்தை ராஜசேகர் ரெட்டி 2007-ல் கொண்டு வந்த சட்டத்தில் திருத்தம் செய்து இப்போது அமல்படுத்தியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த 2007-ல் ஏற்பட்டது போல் இப்போது பலத்த எதிர்ப்புகள் ஏதும் உருவாகவில்லை. இந்த அதிரடி சட்டம் மூலம் சமூக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் அரசு பற்றி ஆதாரமற்ற செய்தி வெளியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்காணிப்பு
செய்தி நிறுவனங்கள் சரியான தகவல்களை வெளியிடுகிறதா என்பதை கண்காணிக்கவும், தவறான செய்தி வெளியிடும் நிறுவனங்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தலைமை ஆணையருக்கு அதிகாரம் அளித்துள்ளார் ஜெகன் மோகன்.