ஆந்திராவில் கோவில் சிலைகள் சேதம்- பாதிரியார், தெ.தேசம், பாஜக நிர்வாகிகள் 23 பேர் கைது
அமராவதி: ஆந்திராவில் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக பாதிரியார், தெலுங்குதேசம் மற்றும் பாஜக நிர்வாகிகள் என மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் பல நூற்றுக்கணக்கான இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன என்பது புகார். இதனால் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
இந்து கோவில் சிலைகள் சேத விவகாரத்தை முன்வைத்து ரதயாத்திரை நடத்தப்படும் எனவும் பாஜக அறிவித்திருந்தது. இதனால் ஆந்திரா அரசியலில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் ஆந்திராவில் இந்து கோவில்களில் சிலைகளை சேதப்படுத்தியது நாங்களே என யூ டியூப் சேனலில் பிரவீன் சக்கரவர்த்தி என்ற பாதிரியார் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திராவில் கிராமந்தோறும் மதமாற்றத்தில் ஈடுபடுகிறோம் எனவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து பிரவீன் சக்கரவர்த்தியை ஆந்திர போலீசார் கைது செய்தனர். மேலும் கோவில் சிலைகள் சேதம் தொடர்பாக தெலுங்குதேசம் கட்சியின் 15 பேரும், பாஜக நிர்வாகிகள் 7 பேரும் இதுவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.