உடலில் காயங்கள்.. இருட்டு அறையில் அடைத்து போலீசார் சித்ரவதை.. பெண் கண்ணீர் வீடியோ.. என்ன நடந்தது?
விசாகப்பட்டினம்: தன் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக போலீசார் மீது ஆந்திர மாநில பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை பற்றி பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் லட்சுமி நகர் காலனியை சேர்ந்த பெண் எம் உமாமகேஸ்வரி.சித்தூர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வேணுகோபால் ரெட்டி வீட்டில் அவர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வேணுகோபால் ரெட்டி வீட்டில் இருந்த சிறிதளவு பணத்தை காணவில்லை.
சட்டக் கல்லூரி மாணவர் மீது கொடுங்கையூர் போலீசார் சிறுநீர் கழித்ததாக திடுக் புகார்! காவல்துறை மறுப்பு
காணாமல் போன பணம்
இதற்கிடையே வழக்கம்போல் வேலைக்கு சென்ற உமாமகேஸ்வரியிடம் வேணுகோபால் ரெட்டியும், அவரது மனைவியும் காணாமல் போன பணம் குறித்து கேட்டுள்ளனர். பணம் பற்றி எனக்கு தெரியாது என்று அந்த பெண் பதிலளித்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பணத்தை திருடி விட்டதாக உமாமகேஸ்வரி மீது வேணுகோபால் ரெட்டி சித்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
இருட்டு அறையில் அடைத்து சித்ரவதை
இதனை தொடர்ந்து உமாமகேஸ்வரியை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில்தான் சித்தூர் டவுன் போலீசார் தன்னை போலீஸ் நிலையத்தின் இருட்டு அறையில் வைத்து கொடுமைப்படுத்தியாக உமாமகேஸ்வரி கூறியுள்ளார். ''போலீசார் என்னை துன்புறுத்தினார்கள். என் மீது தகாத வார்த்தைகளால் பேசினார்கள். காவல்நிலையத்தில் உள்ள இருட்டு அறையில் என்னை சித்திரவதை செய்தார்கள். இரவு வெகுநேரம் வரை போலீசார் என்னை வீட்டிற்கு திரும்ப அனுமதிக்கவில்லை. புகாரை ஏற்று பணத்தை திருப்பி தருமாறு போலீசார் வற்புறுத்தினார்கள். எனது கணவரையும் துன்புறுத்தினார்கள்'' என்று அவர் கூறியுள்ளார்.
உடலில் காயங்கள்
உமாமகேஸ்வரி கண்ணீர் மல்க பேசும் வீடியோவை தெலுங்கு தேசம் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. அதே வேளையில் சித்தூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ், பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார்.
போலீசார் மறுப்பு
குற்றச்சாட்டை மறுத்து சித்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பெயரில் ஒரு செய்திக்குறிப்பை காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் ''தனது வீட்டில், 2 லட்சம் ரூபாய் திருட்டில் ஈடுபட்டதாக,
உமாமகேஸ்வரி மீது வேணுகோபால் ரெட்டி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீஸ் விசாரணை துவங்கியது. உமாமகேஸ்வரிக்கு முறையான நோட்டீஸ் அனுப்பி, காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அவர் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார்' என்று கூறியுள்ளனர்.