போயிங் நிறுவனத்திடமிருந்து இரு வகை நவீன ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்திய விமானப்படை!
டெல்லி: பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடமிருந்து இருவகை நவீன ஹெலிகாப்டர்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதை அந்த நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ஏஹெச்-64 இ அபச்சே வகை ஹெலிகாப்டர் மற்றும் சிஹெச்-47எப் சினூக் வகை ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
அபச்சே வகை ஹெலிகாப்டர்கள் மொத்தம் 22 மற்றும் சினூக் வகை ஹெலிகாப்டர்கள் 15 முதல்கட்டமாக கொள்முதல் செய்யப்பட உள்ளது.
போர் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் இந்த இரு வகை ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்த முடியும். அபச்சே வகை ஹெலிகாப்டர்களை வாங்கும் உலகின் 14வது நாடு இந்தியா. சினூக் வகை ஹெலிகாப்டர்களை வாங்கும் 19வது நாடு இந்தியாவாகும்.
இந்த தகவலை உறுதி செய்த போயிங் நிறுவனத்துக்கான, இந்திய தலைவர் பிரத்யுஷ் குமார், "இந்தியாவுடனான நெருக்கத்தை இந்த ஒப்பந்தம் நெருக்கமடையச் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், சினூக் ஹெலிகாப்டரின் சில உபகரணங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மற்றொரு வகை ஹெலிகாப்டர் உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது குறித்து சக நிறுவனங்கள் சிலவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.
இந்த இருவகை ஹெலிகாப்டர்களுமே, நவீன வகையை சேர்ந்தவை. பல்முனை தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது, அபச்சே வகை ஹெலிகாப்டர்கள். அமெரிக்க ராணுவத்திலும் இந்த வகை ஹெலிகாப்டர்கள் பயன்பாடு உள்ளது.
சினூக் பல அடி உயரத்தில் பறக்க கூடியது. இந்திய மலைப்பகுதிகளுக்கு ஏற்றது. இதுவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்தான்.