உங்கள் விடுதலையை ஏன் ரத்து செய்யக் கூடாது ?: சல்மான் கானுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: கார் விபத்து வழக்கில் இருந்து உங்களை விடுவித்ததை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சல்மான் கானிடம் கேட்டுள்ளது.
2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை ஏற்றினார் என்பது புகார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
13 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மும்பை உயர் நீதிமன்றம் சல்மான் கானை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதிகள் ஜக்ஜித் சிங் கெஹார், சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற அவர்கள் சல்மான் கான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வழக்கை ஆறு வாரங்களில் விசாரிக்க உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சல்மான் சார்பில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான கபில் சிபல் கூறுகையில், விபத்து நடந்த அன்று காரை சல்மான் தான் ஓட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.