கடைசி நாள்வரை ஆசிரியராக வாழ்ந்தவர் அப்துல் கலாம்: மாணவர்கள் மத்தியில் மோடி புகழாரம்
டெல்லி: ஓய்வு பெற்ற பிறகும் ஆசிரியர் பணியாற்றி திருப்தியடைந்தவர் அப்துல் கலாம் என்று ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மானக்ஷா ஆடிட்டோரியத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
விழாவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி துவக்கி வைத்தார். முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்ட மோடி, கலாஉத்சவ் என்ற பெயரிலான மாணவர்களுக்கான இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்களிடம் மோடி பேசுகையில், முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் நாளைதான் என்றாலும், நாளை கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி விடுமுறை என்பதால் இன்று உங்களை சந்திக்கிறேன்.
டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானி ஆகியோரை ஒரு ஆசிரியர் தான் உருவாக்குகிறார். ஆனாலும், அவர்கள் ஆசிரியராகவே தொடருகிறார்கள். ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. ஆசிரியர்களை அங்கீகரிப்பதையே எனது அரசு நோக்கமாக கொண்டு வருகிறது.
மாணவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ளவே கலா உத்சவ் என்ற இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், பதவியில் ஒய்வுபெற்ற பின்னரும் பாடம் எடுத்தார். இறந்த கடைசி நாள் வரை கலாம் ஆசிரியராக பணியாற்றினார். அவர் குழந்தைகளையும், மாணவர்களையும் மிகவும் நேசித்தார். எப்போதுமே தன்னை ஒரு ஆசிரியராக நினைவில் கொள்ளப்படவே கலாம் விரும்பினார்.
கலைகள் இல்லையெனில் நமது வாழ்க்கை இயந்திரத்தனமாகி விடும். நம் குழந்தைகள் ரோபோவை மாதிரி உருவாகாமல் பெற்றோர் தடுக்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையை வடிவமைப்பவர் ஆசிரியர்கள் தான் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 800 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்கள்.