ஜெ. வழக்கில் ஒரு வாரத்தில் அப்பீல் மனு ரெடி: கர்நாடக சட்ட அமைச்சர்
பெங்களூர்: இன்னும் ஒரு வாரத்தில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு அப்பீல் மனு தயாராகும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் ஜெயச்சந்திரா கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவில் வாதிட, சிறப்பு வழக்கறிஞராக ஆச்சாரியாவும், சீனியர் வழக்கறிஞராக டெல்லியிலுள்ள அரிஸ்டாடிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இணைந்து, மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வருகின்றனர் என்றார்.
இன்னும் எத்தனை நாட்களில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயச்சந்திரா, நான் 3 நாட்கள் முன்பு டெல்லி சென்றிருந்தேன். அப்போது அப்பீல் பணிகளை மேற்பார்வையிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் அப்பீல் மனு தயாராகும் வாய்ப்பு உள்ளது என்றார்.
அதேநேரம், கடந்த வாரம் ஆச்சாரியா அளித்த பேட்டியில், ஜூலை 1ம் தேதிக்கு பிறகு அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.