நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக புதிய ஆளுநர்கள் நியமனம்!
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாகவே புதிய ஆளுநர்களை நியமித்துவிட மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதலே மாநில ஆளுநர்களை மாற்றுவதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக பல மாநில ஆளுநர்களை பதவி விலகுமாறு மத்திய அரசு வலியுறுத்திப் பார்த்தது.
உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக இருந்த ஜோஷி, சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த சேகர் தத் ஆகியோர் மட்டும் ராஜினாமா செய்துள்ளனர். நாகாலாந்து ஆளுநர் அஸ்வினிகுமார், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் ஆகியோரும் விரைவில் பதவி விலகக் கூடும் என்று தெரிகிறது.
ஆனால் கர்நாடகா ஆளுநர் பரத்வாஜ், கேரளா ஆளுநர் ஷீலா தீட்சித் ஆகியோர் ராஜினாமா செய்ய மறுத்து வருகின்றனர். இவர்களை அனேகமாக வடகிழக்கு அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றிவிட மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது,
இதனிடையே கோவா மாநில ஆளுநர் வான்சூ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் இருவருமே கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதேபோல் ஹரியானா மாநில ஆளுநர் ஜகன்னநாத் பஹாடியாவும் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார்.
மேலும் மாநில ஆளுநராக நியமிக்கப்பட உள்ளோர் பட்டியலில் அடிபடும் பாஜக மூத்த தலைவர் லால்ஜி தண்டனும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார்.
மத்திய அரசைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற கூட்டத்துக்கு முன்பாகவே ஆளுநர்களை நியமித்துவிட முடிவு செய்துள்ளது. அதனால் ஓரிரு நாட்களில் புதிய ஆளுநர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.