முலாயம் பிறந்தநாள் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் "சாங்"... லாலு மட்டும் மிஸ்ஸிங்!
சைபாய்/உ.பி: உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாள் விழா, அவரது சொந்த ஊரான சைபாய் கிராமத்தில் கலாச்சார திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைபாய் நகரமானது லக்னோவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்நிலையில், நேற்று சைபாயில் வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இசைக் குழுவுனருடன் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவருடன் பாடகர் ஹரிஹரனும் இணைந்து பாடல்களைப் பாடினார்.
லாலு வரவில்லை...
சைபாய் நகரில் உள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொள்ளவில்லை.
கோபம்...
பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவுக்கு முலாயம் சிங் யாதவ் வரவில்லை. மேலும் சமாஜ்வாடி தலைவர்கள் யாரும் வரவில்லை. அவரது மருமகள் டிம்பிள் யாதவைக் கூட முலாயம் அனுப்பி வைக்கவில்லை. இதனால் கோபத்தில் இருந்து வருவதால்தான் லாலு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
விருந்து...
பிறந்த நாளையொட்டி 76 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வைக்கப்பட்டு அதை முலாயம் சிங் யாதவ் வெட்டினார். பிறந்த நாள் விருந்தில், இத்தாலிய, சீன தாய் நாட்டு உணவு வகைகள் படைக்கப்பட்டன. இதற்காக டெல்லி, மும்பையிலிருந்து சிறப்பு சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
விருந்தினர்கள்...
பிறந்த நாள் விழாவில் ஒரு லட்சம் பேர் விருந்தினர்களாக அவைக்கப்பட்டிருந்தனர். முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, நடிகர்கள் அமீதா்ப் பச்சன், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் அடக்கம்.