சிபிஐ கூடுதல் இயக்குநராகப் பதவியேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் திடீர் சஸ்பெண்ட்
டெல்லி: சிபிஐ கூடுதல் இயக்குநராக பெண் ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்றுக்கொண்ட சில மணி நேரங்களில் அவர் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சிபிஐ பணியில் சேருவதற்கான தமிழக அரசின் முறையான அனுமதியை அவர் பெறவில்லை என்று இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
சி.பி.ஐ. அமைப்பின் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
1980-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.
இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை-இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார்.
குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர். இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கியது.
நியமனத்தில் சர்ச்சை- கோர்ட்டில் வழக்கு
முன்னதாக இவரது நியமனத்தை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் விசாரணைக்குப் பின்னர் அது தள்ளுபடி
செய்யப்பட்டது.
இந்த நிலையில், பத்திரிகையாளர் வினித் நாராயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வினித் நாராயன், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர். தனது மனுவில் மத்திய ஊழல் கண்காணிப்புச் சட்டம் மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சட்டம் ஆகியவற்றின் விதிமுறைகளுக்குப் புறம்பாக அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக திருத்தியமைக்கப்பட்ட ஜன் லோக்பால் சட்டத்தின் தேர்வு வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்று கூறியிருந்தார்.
நாராயன் சார்பில் பிரபல வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
இந்தப் பின்னணயில்தான் அர்ச்சனா ராமசுந்தரம் இன்று சிபிஐ கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றிருந்தார். ஆனால் தமிழக அரசு அதிரடியாக அவரை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளது.
முன்னாள் பொதுப்பணித்துறை செயலாளரின் மனைவி
அர்ச்சனாவின் கணவர் ராமசுந்தரம் முன்னாள் பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆவார். இவரது பதவிக்காலத்தின்போதுதான் சென்னையில் திமுக ஆட்சி சார்பில் பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அது கட்டி முடிக்கப்பட்ட நிலையில் விருப்ப ஓய்வில் ராமசுந்தரம் சென்றார் என்பது நினைவிருக்கலாம்.