உறியடி திருவிழா... மனித பிரமிடில் ஒலிம்பிக் மெடலா வாங்கப் போறீங்க- சுப்ரீம் கோர்ட் 'பொளேர்'
டெல்லி: ஜென்மாஷ்டமி விழாவையொட்டி நடைபெறும் உறியடி நிகழ்வில் மனித பிரமிடின் உயரத்தை அதிகரிக்க அனுமதி கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமா வாங்க முயற்சிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஜென்மாஷ்டமியையொட்டி உறியடிக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதற்காக அமைக்கப்படும் மனித பிரமிடின் உயரம் 20 அடியை தாண்டக் கூடாது என்றும், அதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஜெய் ஜவான் கிரிடா மண்டல் கோவிந்தா பதக் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அது கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிராவில் உறியடிக்க அமைக்கப்படும் மனித பிரமிடின் உயரத்தை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைக்கு மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. மனித பிரமிடின் உயரத்தை அதிகரித்து ஒலிம்பிக்கில் என்ன தங்கப் பதக்கமா வாங்க முயற்சிக்கிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.