‘நீங்கள் என் உறவினரா...?’ மருத்துவமனையில் மம்தா பானர்ஜியை விசாரித்த சுசித்ரா சென்
கொல்கத்தா: மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, நலம் விசாரிக்கச் சென்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ‘நீங்கள் என் உறவினரா?' என விசாரித்தாராம் நடிகை சுசித்ரா சென்.
வங்காள ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் நடிகை சுசித்ரா சென். இவர் கடந்த 1953-ம் ஆண்டு முதல் 1976 வரை திரை உலகில் கொடி கட்டிப் பறந்தார்.
இவர் ‘தேவதாஸ்', ‘ஆந்தி', ‘அக்னி பரிக்ஷா' உள்ளிட்ட இந்திப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவருக்கு நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அபாய கட்டத்தை அடைந்த சுசித்ரா இன்று காலை 8.15 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தற்போது அவருக்கு வயது 83.
மறைந்த நடிகை சுசித்ரா சென்னுக்கு மேற்கு வங்காள முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘இன்றைய தினம் நாம் அனைவருக்கும் துக்க தினமாக அமைந்து விட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது இரங்கல் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது....
இறுதிச்சடங்கு....
சுசித்ரா சென்னின் குடும்பத்தார் அமைதியான இறுதிச் சடங்கு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
நல்லடக்கம்....
சென்னின் இறுதிச் சடங்கு கொல்கத்தாவின் தென் பகுதியில் உள்ள கொரட்டலா இடுகாட்டில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தகுந்த மரியாதையுடன் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
உறவினரா...?
நேற்று நான் சென்று பார்த்த போது கூட சென் அனைவரையும் சரியாக அடையாளம் கண்டு கொண்டார். என்னைப் பார்த்து ‘நீங்கள் என் உறவினரா?' எனக் கேட்டார்.
சோகம்....
கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப் போட்டிருந்தார் சென் என்றால் அது மிகையாகாது. சென்னின் மரணம் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.
7 முறை....
சுசித்ரா சென் ஆஸ்பத்திரியில் இருந்த நாட்களில் அவரை மம்தா பானர்ஜி 7 முறை சென்று பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.