Exclusive: இந்தியா தயாரித்த முதல் அணு ஆயுத நீர்மூழ்கி போர் கப்பல் விரைவில் கடற்படையில் சேர்ப்பு!
கொச்சி: கடற்படையில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக இந்திய கடற்படை தலைமை தளபதி ஆர்.கே.தோவன் 'ஒன்இந்தியாவுக்கு' அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில் தெரிவித்தார்.
கடற்படை தினம் வரும் 4ம்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், 'ஒன்இந்தியாவுக்கு' நாட்டின் தலைமை கடற்படை தளபதி ஆர்.கே.தோவன் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நமது கடற்படையின் பலத்தை நிலை நிறுத்தவும், கடற்படைக்கு உதவும் வகையிலும் ருக்மிணி என்ற செயற்கைக்கோள் கடந்தாண்டு ஏப்ரலில் விண்ணில் ஏவப்பட்டது. அந்த செயற்கைக்கோள் முற்றிலும் கடற்படை பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட ஒன்றாகும். ருக்மிணி செயற்கைக்கோளால் கடற்படைக்கு மிகுந்த பயன் கிடைக்க தொடங்கியுள்ளது.
இந்திய கடற்படைக்கு கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் அவ்வப்போது இணைக்கப்பட்டு வரப்படுகின்றது. இந்தி பெருங்கடல் ரோந்து பணிகளுக்காக கூடுதலாக நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகிறது. இப்போது, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக இந்த வகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறோம். வருங்காலங்களில் நீரை உறிஞ்சும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களும் எங்களுக்கு தேவைப்படுகிறது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது அணு ஆயுத நீர்மூழ்கி போர்க்கப்பலான 'அரிகாந்த்' விரைவிலேயே தனது துறைமுக சோதனைகளை முடித்துக் கொண்டு கடலுக்குள் வர உள்ளது.
முறையான நடைமுறைகளை பின்பற்றாததுதான் கடந்த ஓராண்டாக கடற்படை கப்பல்களில் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம். கடற்படை என்பது நன்கு வகுத்தளிக்கப்பட்ட பணி. அந்த நடைமுறைகளின்படி கப்பல் செலுத்தப்படுமானால் விபத்துகள் ஏற்படாது. கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பலின் சராசரி ஆயுட்காலம் 30 முதல் 35 வருடங்களாகும். நமது கடற்படையிலுள்ள 50 சதவீத கப்பல்கள் 20 வருடங்களுக்கும் மேல் பழமையானவை. சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருக்கும் கடல்பகுதியில் நீர்மூழ்கி கப்பல் அல்லது போர்க்கப்பல்களை செலுத்துவது மிகவும் சவாலான காரியமாகும்.
கப்பல்களை பராமரிப்பதில் நமது கேப்டன்களும், அதிகாரிகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் யாருமே விபத்துகளை விரும்பபோவதில்லை. பாதுகாப்பு தணிக்கை முறையை அறிமுகம் செய்துள்ளோம். கப்பல்களின் பாதுகாப்பு அடிக்கடி தணிக்கைக்கு உள்ளாக உள்ளது. இதன் மூலம் விபத்துகளை குறைப்பது எங்கள் நோக்கம்.
அவ்வப்போது கப்பல்களையும், போர்க்கப்பல்களையும் இணைத்து வருவதால் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய இனிமேல், புதிதாக கடற்படைக்கு ஆட்கள் எடுக்க உள்ளோம். இவ்வாறு கடற்படை தலைமை தளபதி ஆர்.கே.தோவன் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!


Click it and Unblock the Notifications

























