மறைந்தார் ராணுவ செய்தித் தொடர்பாளர் நடேசன் ஆண்டவன்!
சென்னை\பெங்களூரு: பாதுகாப்புத்துறை ஒரு அருமையான செய்தித் தொடர்பாளரை இழந்துள்ளது. சென்னையில் பாதுகாப்புத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தவரான நடேசன் ஆண்டன் காலமானார்.
திஙகள்கிழமைன்று கோரமான விபத்தை சந்தித்தார் ஆண்டவன். முதலில் ஆட்டோ மோதி பலத்த காயத்துடன் கீழே விழுந்த அவர் மீது டூவீலர் மோதியதில் அவரது நிலைமை மோசமானது. சென்னை சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனை முடித்து விட்டு புரசைவாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையைக் கடந்த போது அவர் விபத்துக்குள்ளானார். 2 நாட்களாஜ செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணத்தைத் தழுவினார்.
52 வயதான நடேசனுக்கு மனைவி ஜாய் ஆண்டவன் (அகில இந்திய வானொலியில் செய்தி ஆசிரியராக இருக்கிறார்), மகன் பெஞ்சாய், மகள் காத்தரீன் ஆகியோர் உள்ளனர்.
நடேசன் ஆண்டவன், 2009ம் ஆண்டு பாதுகாப்புத்துறையின் செய்தி மக்கள் தொடர்பு பிரிவில் பணியில் சேர்ந்தார். சேர்ந்த குறுகிய காலத்திலேயே ஊடகங்களின் நண்பராக மாறிப் போனார். காரணம் அவரது குணம்.
சென்னை தி ஹிந்து பத்திரிகையின் சிறப்புச் செய்தியாளர் டென்னிஸ் ஜேசுதாஸன் கூறுகையில், அவரை எனக்கு கடந்த 5 வருடமாக நன்கு தெரியும். பாதுகாப்புத் துறை தொடர்பான பல செய்திகளுக்கு தேவையான செய்திகளை கொடுப்பதில் ஆர்வம் காட்டுவார். மீடியாக்களுக்கு பாதுகாப்புத்துறை குறித்த அறிவை அதிகம் புகட்டியதில் அவரது பங்கு மகத்தானது. எப்போது செய்தி கேட்டாலும் கொடுக்க சுணக்கம் காட்டாதவர் என்றார்.
கொச்சி தி ஹிந்து நாளிதழின் சிறப்புச் செய்தியார் எஸ்.ஆனந்தன் கூறுகையில், அருமையான மனிதர் ஆண்டவன். உதவி செய்வதில் அவர் சிறந்தவர். அந்தமான் தீவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மிலன் கடற்படை பயிற்சியின்போது அவருடன் இருந்தேன். பாதுகாப்புத்துறையின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மிகச் சிறந்த முகமாக பணியாற்றியவர். ஊடகங்களுக்கு என்ன தேவை என்பது அவருக்கு சரியாக தெரியும். தனது பணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டவர் நடேசன் ஆண்டவன் என்றார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் பீரோ சீப் எஸ். அனில் கூறுகையில், அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதர். ஜர்னலிசத்தில் அவர் அதிக ஆர்வம் காட்டியவர். 2009ம் ஆண்டு பாதுகாப்புத்துறை செய்தியாளர்களுக்கான படிப்பை படித்தவர். மிகவும் எளிமையானவர். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரது திடீர் மரணம் மீடியாக்களுக்கு மிகவும் பெரிய இழப்பாகும் என்றார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் நடேசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்டவன், ஒரு தொழில்முறை தகவல் தொடர்பாளர். சிறப்பாக தனது பணியில் விளங்கியவர். ஊடகத்துறையினருடன் நல்லுறவை பேணிக் காத்தவர். அவருடைய குடும்பத்திற்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதேபோல பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் சிதன்ஷு கர், கொல்கத்தா பாதுகாப்புத்துறை தலைமை பிஆர்ஓ குரூப் கேப்டன் டி.கே.சிங்கா, பாதுகாப்புத்துறை புகைப்படக் கலைஞர் "ஸ்கைமேன்" சதீஷ் எனப்படும் பசனி சதீஷ் குமார் உள்ளிட்ட பலரும் நடேசன் ஆண்டவனின் மறைவுக்குஇரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதிலும், ஆண்டவனின் மறைவால் தான் அனாதையாகி விட்டதாக உருக்கமாக கூறியுள்ளார் சதீஷ் குமார். கடந்த ஐந்து வருடமாக ஆண்டவனுடன் இணைந்து பணியாற்றியவர் சதீஷ்.
பெங்களூரு பாதுகாப்புத் துறை பிராந்திய பி.ஆர்.ஓ அலுவலக அதிகாரி மது நாயர், பெங்களூரு பாதுகாப்புத்துறை மற்றும் ஏர்ஸ்பேஸ் பத்திரிகையாளர் அமைப்பு, உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாளை இறுதிச் சடங்குகள்
மறைந்த நடேசன் ஆண்டவன், வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பெருமுச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.