சல்மான் மீதான ஆயுத தடுப்பு வழக்கு.. இறுதி விசாரணை இன்று தொடக்கம்
நடிகர் சல்மான் கான் மீதான ஆயுத தடுப்பு வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் தொடங்குகிறது.
ஜோத்புர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரியவகை மான்களை வேட்டையாடிய போது நடிகர் சல்மான் கான் அனுமதியில்லாத துப்பாக்கியை வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
கடந்த 1998-ம் ஆண்டு 1, 2-ம் தேதிகளில் ஜோத்புர் அருகில் உள்ள கங்கனி கிராம வனப்பகுதியில் அரிய வகை மான்களை நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கில் சல்மான் அந்த மாநில உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மான் வேட்டையாடிய போது அனுமதி இல்லாத துப்பாக்கியை சல்மான் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாட்சியங்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டுவிட்டனர். எனவே, இந்த வழக்கில் இறுதி விசாரணையை தொடங்குமாறு ஜோத்புர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று தொடங்குகிறது. இறுதி விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பது குறித்து முடிவு எடுக்கும் என்று சல்மான் தரப்பு வழக்கறிஞர் சராவாத் தெரிவித்துள்ளார்.
சல்மான்கான் மீதான ஆயுத தடுப்பு வழக்கு இறுதி விசாரணை இன்றுதொடங்கவுள்ள நிலையில் அவரது சகோதரி அல்வீரா சில வழக்கறிஞர்களுடன் ஜோத்புர் வந்தடைந்துள்ளார்.
மேலும், இந்த வழக்கு குறித்து சல்மானின் வழக்கறிஞர் சராவாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். முந்தைய நீதிபதி ராஜ்சத் குமார் மிஸ்ரா இருந்தபோது கடைசியாக இந்த வழக்கில் சாட்சியங்கள் 5 பேரிடம் சல்மானின் வழக்கறிஞர் மறு விசாரணை நடத்தினார்.
மேலும், சல்மான் கான் மீது ஆயுத தடுப்பு வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.