ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் 22 வயது கேப்டன் பவன்குமார் மரணம்
காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போராடுகையில் 22 வயதான ராணுவ வீரர் கேப்டன் பவன் குமார் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாம்போர் என்ற நகரில் சனிக்கிழமை மாலை தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் உள்ளூர்வாசி ஒருவரும் குண்டு பாய்ந்து பலியானார்.
இதையடுத்து தீவிரவாதிகள் அங்கு உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்திற்குள் புகுந்தனர். அப்போது அந்த கட்டிடத்தில் 100 மாணவர்கள், 50 பயிற்சியாளர்கள் இருந்தனர்.
பாதுகாப்பு படையினர் அந்த கட்டிடத்தில் இருந்த மாணவர்கள், பயிற்சியாளர்களை பத்திரமாக மீட்டனர். கட்டிடத்திற்குள் எத்தனை தீவிரவாதிகள் உள்ளனர் என்பது தெரியவில்லை. நேற்று மாலையில் இருந்து கட்டிடத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் கேப்டன் பவன் குமார்(22) மீது குண்டு பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
அவரது உடல் ஹரியானா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ஜிந்த் நகருக்கு நாளை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஹரியானாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் உடலை இன்று அனுப்பி வைக்க முடியவில்லை.
ராணுவ தினத்தன்று பிறந்து நாட்டிற்காக இறந்த தனது மகனை நினைத்து பெருமைப்படுவதாக பவன் குமாரின் தந்தை ராஜ்பீர் சிங் தெரிவித்துள்ளார். ஒரு மகனை பெற்றேன், அவரையும் நாட்டிற்காக கொடுத்துவிட்டேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த ஆபரேஷனில் காயம் அடைந்த பவன் அதை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த ஆபரேஷன்களில் கலந்து கொண்டார் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.